கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையம் 1, 2 இயங்கி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. மின்சாரம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு மட்டும்தான். சுற்றுப்புற கிராம மக்களுக்கு அல்ல. 8.1.2018 அன்று எதிர்பாராத காரணங்களுக்காக சென்னை அணுமின் நிலைய செயல்பாடு நிறுத்தப்பட்டது. கதிர்வீச்சுக் கசிவு இருப்பதை உறுதி செய்த விஞ்ஞானிகள், இதுநாள்வரை (ஒரு வருடத்திற்கு மேலாகியும்) தெளிவாக எங்கிருந்து கதிர்வீச்சுக் கசிவு ஏற்படுகிறது, எதனால் அது ஏற்பட்டது எனக் கண்டறியாமல் உள்ளனர்.
இந்திய அணுசக்தித் துறை வரலாற்றில் காரணம் தெளிவாகத் தெரியாமல் ஒரு வருடத்திற்கு மேலாக அணுஉலை மூடியிருப்பது இதுவே முதல் தடவை. விஞ்ஞானிகள் ஒருபுறம் கதிர்வீச்சுக் கசிவிற்கான காரணத்தைக் கண்டறிய முற்பட்டாலும், அணுமின் நிலையத் தகவல்களை யார் எனக்கு கொடுக்கின்றனர்? எப்படி இதைப் பத்திரிக்கை செய்தி ஆக்காமல் பார்த்துக் கொள்ளலாம்? சுற்றுப்புறப் பெரும் தலைகளை ‘கண்டுகொண்டு’ உள்ளூரில் பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம் எனவும் தீவிரமாக ஆலோசித்து, அதை சாதித்தும் உள்ளனர். விகடன் இணையதளம் மட்டுமே விதிவிலக்காக இருந்து அணுஉலைப் பிரச்சினைகளை செய்தியாக வெளியிட்டது.
கசிந்த கதிர்வீச்சை நிர்வாகம் என்ன செய்யும்? புகைபோக்கி வழியாக வெளியிடப்படும். அல்லது கடலில் கொட்டப்படும். ஆக, சுற்றுப்புறத்தில் வெளியாகி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் என்பதே உண்மை. அணுஉலை நிர்வாகத்தால் செய்யப்பட்ட மருத்துவ ஆய்வில் சுற்றுப்புற மக்களுக்கு இரத்தப்புற்று நோய் இல்லை எனும் கூற்று பொய் என நிரூபணமாகியுள்ளது. சட்ராசில் 11 வயதுப் பெண், மணமையில் 43 வயதுப் பெண்மணி இரத்தப்புற்று நோயால் இறந்துள்ளனர். இந்தியாவில் கதிர்வீச்சால் பாதிப்படையும் அணுசக்தி ஊழியர்களுக்கும், சுற்றுப்புற மக்களுக்கும் இழப்பீட்டுத் தொகை கொடுக்க தனிச்சட்டங்கள் இல்லை. அமெரிக்கா, சப்பான் போன்ற மேலைநாடுகளில் இது உள்ளது.
சுற்றுப்புறத்தில் உள்ள வன்னியர்கள், தலித்துகள், மீனவர்கள், முஸ்லீம்கள் சார்பாக செயல்படும் அரசியல் கட்சிகள் இதில் போதுமான அக்கறை காட்டவில்லை. அணுசக்தி நிர்வாகம் சார்பாக உள்ளூரில் பிரச்சினை ஏதும் ஏற்படாமல் பேரம் பேசப்படுகிறது. மேற்கூறப்பட்ட மக்களில் உள்ள பெரும் தலைகள், அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசப்பட்டு சில்லறைச் சலுகைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. (அணுசக்தி பள்ளியில் இடம், சிலருக்கு ஒப்பந்த வேலை, அவர்கள் சிபாரிசி செய்யும் சிலருக்கு வேலை, நிர்வாகத்தினருக்கு வண்டி ஓட்டுதல்… போன்றவை) ஊராட்சித் தலைவர்களும் கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆக ஒவ்வொரு பிரிவினரிடம் இருந்தும் சிலருக்கு சலுகை கொடுத்து, அணு உலைப் பாதுகாப்பு, மக்களுக்கு பாதிப்பு முதலிய சிக்கல்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. ஒவ்வொரு போராட்டமும், குறிப்பாக அரசியல் கட்சிகள் மூலம் பேரம் பேசும் களமாக மாற்றப்படுகிறது. வெற்று வாய்ச்சவடால் பேசி, பாதிக்கப்படும் நபர்கள் சாதி, மதம் பிற வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுகூடிப் போராட விடாமல் தடுக்கும் வேலைதான் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
சுற்றுப்புற இந்து, கிறித்துவ, முஸ்லீம் மத அமைப்புகளும் உண்மையைச் சொல்ல முன் வருவதில்லை. எந்த மதம் உண்மையைச் சொல்லக்கூடாது என சொல்கிறது? சாமி கும்பிடுவது சுயநலனுக்கு மட்டுமா எனும் கேள்வி எழுகிறது.
பத்திரிகைகள் அனைத்தும் உண்மையைச் சொல்வதற்கு பதில் பணம், விளம்பரம், நிர்வாகச் செய்திகள் மட்டும் என பத்திரிகை தர்மமின்றி செயல்படுகின்றன. விஞ்ஞானிகள் யாரும் அறிவியல் பற்றியோ, ஒளிவுமறைவற்ற தன்மை பற்றியோ பேசுவதில்லை. பேசுபவர்கள் பழிவாங்கப்படுவர். உண்மையைச் சொல்ல வேண்டுமா? பிழைப்பா என வரும்போது, பிழைப்பே முக்கியம் எனும் முடிவு பல தரப்பினராலும் எடுக்கப்படும் சூழலே நிலவுகிறது.
அணுஉலையின் ஆயுட்காலம் 30-40 வருடம்தான் என இருக்க, சென்னை அணுமின் நிலையம் 1, 2 இயங்கி 30 வருடங்களுக்கு மேலாகிறது. இருப்பினும் நிரந்தரமாக மூடும் வேலையை அணுசக்தி நிர்வாகம் மேற்கொள்ளாமல், இயன்றவரை அதை செயல்படுத்தி மின்சார உற்பத்தி என்பது மட்டுமே பேசப்பட்டு, பாதிப்புகள் குறித்த விசயங்கள் தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகின்றன.
சாதாரண மக்களோ, அன்றாட வாழ்க்கையை ஒட்டி, சாப்பாட்டிற்காக வாழும் சூழலும், அரசியல் கட்சி, பெரு நிறுவன இயக்கங்களோ, பிரச்சினையை எடுப்பது போல் நடித்து தலைவர்கள், குடும்பம், ஒரு சிலர் மட்டுமே ஒவ்வொரு பிரிவினரிலும் பயன்பெறுதல் என்பதற்கு மட்டுமே அரசியல் பேசி உழைத்து, மக்களை ஏமாற்றி வருகின்றன.
மக்கள் குறைதீர் மையங்களாக செயல்படும் அரசு அதிகாரிகள், காவல்துறை, நீதிமன்றங்கள் பாதிக்கப்படுபவர் சார்பாகச் செயல்படாமல், அரசியல் அழுத்தங்களுக்குப் பணிந்து, கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கைகோர்த்து உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பதில், மக்கள் நலனுக்கு எதிராகவே செயல்படுகின்றன.
உண்மைக்கும், நேர்மைக்கும் மதிப்பளிக்கும் சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோமா? கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள், அரசியல்வாதிகள், காவல்துறை, நீதித்துறையுடன் கைகோர்த்து இலாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மக்களின் உரிமைகள்/நலன்கள் பறிக்கப்பட்டு வருகின்றன. உண்மைக்கும், நேர்மைக்கும் மதிப்பளிக்கும் சமூகத்தை உருவாக்கினால் மட்டுமே மக்கள் நலன் குறிப்பாக, ஏழைகளின் நலன் காக்கப்படும்.
ஒரு குடும்பத்தில் இறப்பு ஏற்பட்டால் கூட எதிர்/பக்கத்து வீட்டுக்காரர்கள் பெருமளவு கவலை கொள்ளாத சமூகச்சூழலில், நான் என்பதை மட்டுமே சிந்திப்பதை நிறுத்தி ‘நாம்‘ என சிந்திக்கும் சமூகப்போக்கு வளர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, நடைமுறையில் வந்தால் ஒழிய சமூக அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி காண முடியாது.
ஒரு பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் என்ற அடிப்படையில் மக்கள் தங்களிடம் உள்ள வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைந்து போராட முன்வருவதே வெற்றிக்கான முதற்படி. அதை நோக்கிய பயணத்தில் ஒரு விவாதத்தைத் தொடங்குவது நல்ல விசயமாக இருக்கும்.
கல்பாக்கம் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள் இவையே.
(ஆக சுற்றுச்சூழல் பிரச்சினை என்பது சமூகத்தின் பல தளங்களில் தொடர்புடையது. தீர்வு என யோசிக்கும்போது அவற்றையும் இணைத்தே சிந்திக்க வேண்டும்.)
மருத்துவர் வீ. புகழேந்தி