கடந்த மார்ச் மாதத்தில்,பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள்,தாமிரபரணியில் தண்ணீர் எடுப்பதற்கு உயர்நீதிமன்றம் அனுமதியளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.இது குறித்த உங்கள் கருத்து ?
தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் வறட்சி; குடித் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. வாரம் ஒருமுறை கூடத் தண்ணீர் கிடைப்பது அரிதாகிவிட்டது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணியும் வறண்டுக் கிடக்கிறது. மணிமுத்தாறு நீர்த்தேக்கம் வறண்டுக் கிடக்கிறது. பாபநாசம் அணையிலும் தண்ணீர் மிகக் குறைந்து விட்டது.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள ‘கோக்’ கம்பெனிக்கும், பெப்ஸிகோலா கம்பெனிக்கும் நாள் ஒன்றுக்கு 15 லட்சம் லிட்டர் தண்ணீர் தாமிரபரணி நதியில் சீவலப்பேரியில் தடுப்பணை கட்டப்பட்டு தட்டுபாடில்லாமல் தண்ணீர் வழங்கப்படுகிறது.
அந்நியக் குளிர்பானக் கம்பெனிகளுக்கு தண்ணீர் வழங்குவதைத் தடை செய்ய வேண்டுமென்று உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில்பொது நலவழக்கு போடப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது; மக்களுக்கு ஆறுதலாக இருந்தது. நிரந்தரத் தடை போடப்படும் என்று எதிர்பார்த்தார்கள்.
2017 மார்ச் 2 அன்று உயர்நீதிமன்றம் தடையை நீக்கியதோடல்லாமல் அந்நிய குளிர்பானக் கம்பெனிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட வேண்டுமென்றும், அதற்கான காரணங்களை வலிந்து கற்பிதமாகக் கருத்து தெரிவித்துள்ளளது.
நீர்ப்பற்றாக் குறை நிலையை,இத்தீர்ப்பு கணக்கில் எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லையே?
நீதிமன்ற தீர்ப்பு, தமிழக அரசின் அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பளிப்பதிருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணியைச் சார்ந்துள்ள பகுதிகளில் இதுவரை நீர்ப்பற்றாக்குறை ஏற்படாத நிலையில் இன்னும் பருவமழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும், ஒருவேளை நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டாலும் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பெய்துள்ள மழை மிகவும் குறைவானது எனவும் இது 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வு எனவும் அரசு தெரிவித்து உள்ளது.”
அரசு சமர்ப்பித்த இந்த புள்ளி விபரங்களை ஆராய்ந்த நீதிபதிகள் தமிழகத்தின் பெப்சி, கோக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நீரை வழங்குவதன் மூலமாக தாமிரபரணி சார்ந்துள்ள இடங்களில் நீர்த்தட்டுபாடு என்பதற்கான அறிவியல் பூர்வமான எந்த கருத்தும் இல்லை என தெரிவித்தனர் (பத்திரிகைச் செய்தி)
உயர்நீதிமன்றத் தீர்ப்பு உண்மைக்கு மாறானது தண்ணீர் விநியோகத்தில் முதல் உரிமை குடிநீர்; விவசாயம், ஆடுமாடுகளுக்குத் தண்ணீர் இதரத் தொழில்களுக்கு – இதுதான் மரபு வழி விதிமுறைகள்.
தாமிரபரணி நீர் வளத்தின் பயன்பாடு குறித்து
தாமிரபரணி ஆறு 2000 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளதாக ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழ்நாட்டுப் பகுதியில் உருவாகி, 120 கி.மீட்டர் பாய்ந்து வங்கக் கடலில் சங்கமிக்கிறது. நெல்லை தூத்துக்குடி இரண்டு மாவட்டங்களிலும் ஒன்றரை லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன, ஸ்ரீவைகுண்டம் அணைதான் பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்டது. மற்ற ஏழு அணைகளும் 10 வது நூற்றாண்டு முதல் 16வது நூற்றாண்டுக்குள் கட்டப்பட்டவை.
நாடு விடுதலைக்குப் பின் தொழில் வளர்ச்சியடைந்துள்ளது. அண்மையில் கட்டப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையம், விஜய நாராயணம் கடற்படை, தூத்துக்குடி துறைமுகம், தாரங்கதாரா கெமிகல், மற்ற மாநிலங்களிலிருந்து விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் தொழிற்சாலை, ஸ்பிக் உரக்கம்பெனி உள்ளிட்ட எட்டு நிறுவனங்களுக்கு தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாமல் கொடுக்கப்படுகிறது.தென்மேற்கு பருவமழையால் ஆற்றுப் பாசனமும், வடகிழக்குப் பருவமழையால் புன்செய் நிலங்களும், கிணறுகளும் தண்ணீர் நிரம்பும்.
நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் குடிநீர்த்திட்டங்கள் மூலம் தண்ணீர் வழங்குதல், அண்டையிலுள்ள விருதுநகர் சாத்தூர், அருப்புக்கோட்டை நகரங்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, எட்டையபுரம் ஆகிய நகரங்களுக்கும் தனியாக குடிநீர் வழங்கப்படுகின்றன.
தாமிரபரணியின் தற்போதைய நிலை குறித்து
கடந்த பல ஆண்டுகளாக தாமிரபரணியாற்றில் மணல் கொள்ளையால் தாமிரபரணி மற்றும் சிற்றாறுகளும் வறண்டுவிட்டன.
1994ம் ஆண்டிலிருந்து இருபோக விளைநிலங்களெல்லாம் ஒரு போகமாக மாறிவிட்டன. ஒருபோக விளைச்சலுக்கும் உத்திரவாதமில்லை. நெல்லை மாவட்டத்தில் பாளையங்கால்வாய் பாயும் கிராமங்களில் ஊர்தோறும் இரண்டு மூன்று குளங்கள் உண்டு – எல்லாம் வறண்டு விட்டன. பெரும்பாலும் கார் முதல் போகம் விவசாயம் நிறுத்தப்பட்டுள்ளது.
கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் கோக் நிறுவனத்துக்கு 2005 இல் அனுமதி கொடுக்கப்பட்டது – அப்போதும் மக்கள் எதிர்த்தார்கள். சீவலப்பேரிக்கு கீழுள்ள மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைப்பாசனங்களில் 678 மில்லியன் கனமீட்டர் தண்ணீர் பற்றாக்குறை என அரசே அறிவித்திருக்கிறது.
நீதிமன்றத் தீர்ப்பில் உபரி நீரை வழங்க வேண்டுமென்றல்லவா கூறியுள்ளார்கள்?
பெரிய புயலும் மழையும் பெய்தால்தான் ஸ்ரீவைகுண்டம் அணை நிரம்பி, தண்ணீர் வடியும். நீதிமன்றத் தீர்ப்பில் உள்ளதுபோல் உபரிநீர் எதுவும் இப்போது கிடையாது. தாமிரபரணி ஆற்றில் சீவலப்பேரியில் புதிதாகத் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இரண்டு மதகுகள் மூலம் தண்ணீர் கீழே செல்கிறது, தண்ணீர் 2014 இல் பதினோரு கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது; பெப்சிகோலாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்தே தடுப்பணை கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தற்போதைய தமிழகத்தின் வறட்சி நிலையானது, கடந்த கால தாது வருடப் பஞ்சத்தையல்லவா நினைவு படுத்துகிறது!
142 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட வறட்சி இப்போது ஏற்பட்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வறட்சி நிவாரணத்துக்காக முப்பாதாயிரம் கோடி உதவித்தொகை வேண்டுமென்று மத்திய அரசிடம் மாநில அரசு முறையிட்டுள்ளது. வறட்சியின் கோரநிலையைக் கூட நீதிமன்றத் தீர்ப்பில் காண முடியவில்லை!
கேரள மாநிலத்தில் பிளாச்சி மடாவில் கோக்கோகோலா நிர்வாணம் செயல்பட்டது. அதன் ஆபத்தை உணர்ந்த மக்கள் எதிர்த்துப் போராடினார்கள். அரசு தலையிட்டு கோக் நிறுவனம் மூடப்பட்டது. தமிழ்நாட்டிலும் பெருந்துறையில் கோக் நிறுவனத்தை எதிர்த்துப் போராடினார்கள். மாநில அரசு தலையிட்டு நிறுத்தியது. கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள அந்நிய குளிர்பான நிறுவனங்களை உடனே வெளியேற்ற வேண்டும். மக்கள் போராட்டம் தொடர வேண்டும்
Leave a Reply