காடழித்து, மரம் வளர்ப்போம்…?
ஏ.சண்முகானந்தம்
ஆகஸ்ட் 2014
இன்று நாடு முழுக்க மரம் வளர்ப்பது “Fashion” ஆக மாறியுள்ளது. ‘வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்’, ‘மரம் வளர்த்தால் நாடு செழிக்கும்’ என்ற முழக்கம் விண்ணை முட்டுகிறது. மடாதிபதிகளில் துவங்கி, நகைச்சுவை நடிகர், அரசியல்வாதி, பெரும் தொழில் நிறுவனங்களிலிருந்து கடைக் கோடி மனிதன் வரை, ‘மரம் வளர்த்தல்’ என்பது ஓர் அழகுச் சொல்லாகவும், பெருமைக்குரியதாகவும், மதிப்பிற்குரியதாகவும் மாறி அனைவராலும் முன்னிறுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கில் துவங்கி, லட்சக்கணக்கில் மரம் நடப்படுவதாக ஊடகங்கள், செய்தித்தாள்களில் விளம்பரம் வெளிவருவதை சமீபகாலங்களில் அடிக்கடி காணமுடிகிறது.
ஊடகச் செய்திகளுடன் ஒப்பிடும் போது, தமிழகம் பச்சைப்பட்டு விரித்தாற்போல் பசுமையாகக் காட்சியளிக்கிறதா? என்ற கேள்வி சட்டென எழுகிறது. ஆனால், உண்மை இதற்கு நேர் எதிராகவே உள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளைக் கடந்த நிலையில், காடுகளின் பரப்பளவு வெகுவாகக் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. விளைநிலங்கள், மக்கள் குடியேற்றம், வளர்ச்சித் திட்டங்கள், மின் திட்டங்கள், அணைக்கட்டுகள், தொழில் நிறுவனங்கள் தொடங்க என பலப்பல காரணங்களால் காடுகளின் பரப்பளவு வெகுவாகக் குறைந்து வருகிறது.
சமீப ஆண்டுகளில் விளைநிலங்கள், கிராமங்களுக்கு தொடர்ந்து வரும் யானைகள், சமீபத்தில் ஊட்டியில் மூன்று பேரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டி, சுட்டுக் கொல்லப்பட்ட ஆண்புலி, ஊருக்குள் நுழையும் சிறுத்தைகள் என பலப்பல நிகழ்வுகளே, காடுகளின் பரப்பளவு குறைந்து போனதற்கு நம்முன் உள்ள மௌன சாட்சிகளாகும். காடுகளின் பரப்பளவு குறைவதற்கும், மரம் நடுவதற்கும் ஏதேனும் ஒற்றுமை உள்ளதா? என்றால், நிறையவே உள்ளது எனலாம்.
முதலாளித்துவ உற்பத்தி முறை மனிதனின் உழைப்பை மட்டுமின்றி, இயற்கை வளங்களையும் சுரண்டும் தன்மை கொண்டது. ஏகாதிபத்தியம் உலகைக் சூழ்ந்த வேளையில், முதலாளித்துவத்தின் இயற்கை வளங்களின் சுரண்டல் குறித்தான காரல் மார்க்ஸின் கூற்று இங்கு நோக்கத்தக்கது:
‘முதலாளித்துவ உற்பத்தி முறை மனிதனுக்கும், இயற்கைக்குமான ஒத்திசைவைச் சிதைக்கிறது. மனிதன் மண்ணிலிருந்து பெறுவனவற்றை மண்ணுக்கே, திரும்பத் தரும் மரபைத் தடுக்கிறது. இதன் மூலம் காலங்காலமாக நிகழ்ந்து வந்த இயல்பான இயற்கைச் சுழற்சியைத் தடுக்கிறது. முதலாளித்துவ வேளாண்மை விவசாயியைச் சுரண்டியது மட்டுமின்றி மண்ணையும் களவாடுகிறது.
மண்ணை மீள முடியாத பேரழிவிற்கு உள்ளாக்கி உள்ளது. முதலாளித்துவ வேளாண்மை சமூகத்தின் அடித்தளமான மண்ணையும், மக்களையும், படிப்படியாகச் சிதைக்கும் நுட்பங்களையே உருவாக்கிக் கொண்டுள்ளது. முதலாளித்துவம் மனிதனின் உடல் நலம் குறித்தோ, வாழ்நாள் குறித்தோ, சமூக நிர்ப்பந்தம் உருவாகாதவரை எவ்வித அக்கறையும் கொள்வதில்லை’ என முதலாளித்துவத்தின் தொழில் உற்பத்தி முறையின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறார்.
இந்தியாவில் 60களில் முன்னெடுக்கப்பட்ட பசுமைப் புரட்சிக்குப் பிந்திய சில பத்தாண்டுகளில், அதன் உண்மை முகத்தை விவசாயிகள் புரிந்து கொண்டனர். வாழ்வும், மண்ணும் மீள முடியாத பேரழிவிற்குச் சென்ற பின், பலர் தற்கொலை செய்துகொண்டனர். மூன்றாம் உலக நாடுகளிலுள்ள இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், மலைகள் ஆகியவற்றைக் கவர்வதற்காகப் பல்வேறு ‘வளர்ச்சித் திட்டங்களை’ அந்தந்த நாட்டு அரசின் ஒத்துழைப்புடன் பன்னாட்டு, உள்நாட்டுப் பெருநிறுவனங்கள் முன்னெடுக்கின்றன. ‘வளர்ச்சி’ என்ற மாயையில் வீழ்ந்த மூன்றாம் உலக நாடுகளின் உழைக்கும் மக்களும் தங்களது வாழ்வாதாரமான இயற்கை வளங்களைத் தொடர்ந்து இழந்து வருகின்றனர்.
இதனுடைய உச்சத்தைத் தான் தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களின் பெருவாரியான அடித்தட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆப்பிரிக்கா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளும் இந்நிலையிலிருந்து தப்பவில்லை.
இதன் மறுமுகமாகவே, மரம் வளர்த்தலைக் காண வேண்டியுள்ளது. ஒருபுறம் இயற்கை வளமான காட்டை அழிப்பது, மறுபுறம் பிரபலங்களின் உதவியுடன் மரம் வளர்த்தலின் நன்மையை மக்களுக்குப் போலியாக உணர்த்துவது என்ற இரட்டை நிலையை அரசுகள் பின்பற்றுகின்றன. அதன் பிரதிபலிப்புதான் இன்று நாடு முழுவதும் ‘மரம் நடுவதை’ முன்னெடுப்பது, விழாக்களாகக் கொண்டாடுவது என “Fashion”ஆக உருமாறிவரும் பின்புலத்திலுள்ள பேருண்மையைப் புரிந்துகொள்வோம்.
இன்று மரம் நடுவதை முன்னிறுத்தும் நூறு பேரில் ஒருவராவது, காடுகளின் அழிவிற்கு எதிராகக் குரல் எழுப்புகிறார்களா? என்பதைப் பார்க்கும்போது, இதிலுள்ள உள்நோக்கம் புரியவரும்.
இயற்கை வளங்களான காடுகள், நீர்நிலைகள், மலைகள் யாவும் தனியார் மயமாக்கப்படும்போதும், பேரழிவிற்குள்ளாகும்போதும், போராட முன்வராமல், ‘மரம் நடுவது’ என்ற குரல் யாருக்கானது? என்பதை உழைக்கும் மக்கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இந்நிலையில், மரம் வளர்த்தலை தன்னலமற்ற சூழலில் முன்னெடுத்தவர்கள், சமூக மாற்றத்திற்காகப் பயன்படுத்தியவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் குறித்தும், இயற்கை வேளாண்மை, காடு வளர்ப்பில் சாதனை படைத்த நாடு குறித்துத் தெரிந்து கொள்வதும் தேவையாகிறது.
பிரான்சின் ஆல்ப்ஸ் மலையில், ஆட்டிடையர் ஒருவர் ஆடுகளை மேய்க்கும் போது, தன் கையிலிருக்கும் நீண்ட தடியால் குழியை ஏற்படுத்தி, அதில் ஒரு மர விதையைப் போட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டு, மொட்டையாகக் காட்சியளித்த மலைகளைப் பசுமை போர்த்தியக் காடுகளாக மாற்றிக் காட்டினார். இதனைத் தனது வாழ்நாள் முழுக்கத் தனியரு மனிதராகச் செயல்படுத்திக் காட்டினார்.
பொள்ளாச்சியில் வாழ்ந்த ஆங்கில அதிகாரியான ஹ்யூகோ வுட் தமிழகத்தின் ‘மரம் வளர்த்தவர்’ என்ற பெருமைக்குரியவர். ஹ்யூகோ வுட் தான் செல்லும் இடங்களில் எல்லாம் நீண்ட தடியால் தரையில் துளையிட்டு மர விதைகளை நட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரின் சீரிய பணியால் இன்றளவும் மேற்குத் தொடர்ச்சிக் காடுகள் ஓரளவிற்குக் காப்பாற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.
கென்ய பெண்மணியும், நோபல் பரிசு பெற்றவருமான வங்காரி மாத்தையின் மரம் நடுவை, உலகளவில் பேசப்பட்ட ஒன்றாகும். சமாதானத்திற்கான குறியீடாகவும், உழைக்கும் மக்களின் மேம்பாட்டிற்கான வழியாகவும் மரத்தை முன்வைத்து, தனது வாழ்நாளில் கோடிக்கணக்கான மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளார்.
சென்னைக்கருகிலுள்ள எண்ணூரில் வசிக்கும் நேபாள முதியவர் பகதூர் இராணாவின் தன்னலமற்ற செயல்பாடும் குறிப்பிடத்தக்கது. தனது இளமைக் காலம் முதல் யாருடைய உதவியுமின்றி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்துள்ளார். கோவையைச் சேர்ந்த யோகநாதன் போன்றவர்களின் செயல்பாடுகளும், ‘மரம் வளர்த்த’லுக்கு முன்மாதிரியாகவே உள்ளது.
தனிநபர்களாக ‘மரம் நடுவதில்’ சாதனை படைத்தவர்கள் மட்டுமின்றி, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான, குட்டி சோசலிச நாடான கியூபாவின் இயற்கை வேளாண்மை, காடு வளர்ப்பும் முக்கியத்துவம் பெற்றது. 1959இல் சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ என்ற இருபெரும் தலைவர்களின் மாபெரும் புரட்சியால், அடிமைத்தளையில் இருந்து கியூபா விடுதலை அடைந்தது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால், சோவியத் ருசியாவின் உதவியுடன் நாடு முன்னேற்றப் பாதையில் நடை போடத் தொடங்கியது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின், இரசாயன உரங்கள், டிராக்டர் போன்ற செயற்கை விவசாயத்திற்கு விடை கொடுத்த கியூபா, இயற்கை வேளாண்மையின் பக்கம் தீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்தது. இங்கு தான், கியூபாவின் மக்கள் நலனுக்கான ‘பசுமைப் புரட்சி’யான, ‘இயற்கை வேளாண்மைப் புரட்சி’யை பிடல் காஸ்ட்ரோ முன்னெடுத்து, வெற்றி பெற்றுக் காட்டினார்.
நகர்ப்புற விவசாயத்தை முன்னெடுத்து, காய்கறி மற்றும் உணவுப் பயிர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. மண் வளத்தைக் காக்க, ‘மண்புழு உரத்தை’ மீண்டும் மண்ணுக்குக் கொடுக்க ஆரம்பித்தது. 1987இல் 20,000 மெட்ரிக் டன்னாக இருந்த மண்புழு உர உற்பத்தி, 1992இல் 95,000 மெட்ரிக் டன்னாக மாறியதிலிருந்து கியூபாவின் இயற்கை வேளாண்மையின் தீவிரம் வெளிப்படுகிறது. (ஒரு டன் மண்புழு உரம், 4 டன் சாண உரத்திற்கு ஈடானது) 90 நாட்களில் குப்பையையும், சாணத்தையும் செறிவூட்டும் பணியை மண்புழுக்கள் செய்கின்றன என்ற பேருண்மை, மக்களுக்கு அவர்களது மொழியில் எளிமையாகப் புரிய வைக்கப்பட்டது.
பூச்சிகளைக் கொல்ல இரசாயன உரங்களை உபயோகிக்காமல், பூச்சிக்கட்டுப்பாடு இயற்கை நிலைக்கு மக்களை பிடல் காஸ்ட்ரோ திருப்பினார். பயிர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு பாரம்பரிய முறையுடன், அறிவியல் நுட்பத்தை பயன்படுத்திக் கட்டுப்படுத்தினார்கள் கியூப நாட்டு மக்களுக்கான விஞ்ஞானிகள். களைக்கட்டுப்பாட்டிலும் பாரம்பரிய முறை ஊக்குவிக்கப்பட்டது. மனித ஆற்றல் சரியான நிலையில் முழுமையாக இயற்கை வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டது.
1989ஆம் ஆண்டிற்குப் பிறகான கால கட்டத்தில், ஓரின காடு வளர்ப்பால் ஏற்படும் மண் வள இழப்பு, மண் அரிப்பு போன்ற சூழல் சீர்கேடுகளை உணர்ந்த கியூபாவின் பிடல் அரசாங்கம் உடனடியாக அம்முறையை நிறுத்தி, இயல்பான தாவரங்களை வளர்த்து பல புதிய காடுகளை உருவாக்கியது.
கியூபாவின் விடுதலைப் போராட்டத்தை முதன் முதலாக முன்னெடுத்த ஹோசே மார்த்தி, ‘மரமற்ற பகுதி, வளமற்ற பகுதி. மரமில்லா நகரம், நோயுற்றுப் போகும், வளமற்ற நாடு பாலைவனம். அங்கு நச்சுக் கனிகளே வளரும்’ என எச்சரித்திருந்தார். இதனை சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகே கியூபா உணர்ந்திருந்தது. அதனடிப்படையில் இயற்கையான காடு வளர்ப்பிற்கும், இயற்கை வேளாண்மை பக்கமும் மக்களை பிடல் காஸ்டரோ பயிற்றுவித்தார்.
1959ஆம் ஆண்டு கியூப புரட்சியின்போது 14 விழுக்காடாக இருந்த காடுகளின் பரப்பளவு, பிடலின் முயற்சியின் பயனாக 20 விழுக்காடாக மாறியது. காடுகளின் தேவையை உணர்ந்த பிடல், தனது முன்மாதிரியான ‘மனாட்டி திட்டம்’ மூலம் புதிதாக 7 லட்சம் எக்டேர் பரப்பளவுள்ள காடுகளை மக்கள் ஒத்துழைப்புடன் உருவாக்கி உலக வரலாற்றில் ‘பசுமை சாதனை’ புரிந்தார். காடுகளின் சூழல் மதிப்பு/களையும், பயன்களையும் மக்களுக்குப் பயிற்றுவித்து, அவற்றைக் காப்பதில் அவர்களை முழுமையாக ஈடுபடுத்தினார்.
தன்னலமற்று மரம் வளர்த்தவர்களும், மக்களுக்கான வாழ்வாதாரத்திற்காகவும், சமூக மாற்றத்திற்கான குறியீடாகவும், உழைக்கும் மக்களின் அடிப்படை ஆதாரமாகவும் மட்டுமின்றி கியூபாவின் இயற்கை வேளாண்மையும், காடு வளர்ப்பும் நமக்கு முன் வரலாறாக உள்ளன. இன்று நம்மிடம் உள்ள கேள்வி, இயற்கையாக உள்ள காடுகளின் பரப்பளவு குறைந்து கொண்டு போகும்போது, மரம் வளர்த்தலைப் பேசுவது தீர்வாக அமையுமா? இயற்கையாக உள்ள காடுகளின் பரப்பளவு உயர்த்தப்படுதல் அவசியம். ஓரினப் பயிர் வகைகள், அயல் தாவரங்கள் வளர்ப்பதைத் தவிர்த்து, இயல்பான தாவர வகைகளை வளர்ப்பதை ஊக்குவித்தல் இன்றைய தேவையாக உள்ளது.
காடுகளின் பரப்பளவை அதிகரித்தால் மட்டுமே, இன்று நிலவும் பல சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும். யானைகள், புலிகள், சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்தது, பயிர்கள் நாசம் என்று காட்டுயிர்களின் மேல் குற்றச்சாட்டை வாசிக்கத் தேவையில்லை.
மழைக்காடுகள், நீர்நிலைகள், ஈரநிலங்கள் (சதுப்பு நிலங்கள்) செழிப்பது, காட்டுயிர்களின் சிக்கலற்ற வாழ்வுடன் பிணைந்துள்ளதுடன், சூழலின் சமத்தன்மை காக்கப்படும். மேலும், உணவுச் சங்கிலியின் பிணைப்பும் பேணப்படும்.
மரங்கள் நடுவதை ஊக்கப்படுத்தும் அதே வேளையில், இயற்கையாக உள்ள காடுகளைக் காக்க அணி திரள்வோம். காடுகளைக் காப்பாற்றினால் மட்டுமே, காடுகள் மனித சமூகத்தைக் காக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.
மரம் நடும் விழாக்களையும், போலி பிம்பங்களையும் புறந்தள்ளுவோம். உண்மைக்கு ஆதரவாக ஒன்று திரள்வோம்.
தரவு நூல்கள்
- காட்டுயிர் இதழ் எண்:31, குளிர்
———-
உப்பூர் அனல் மின் நிலையம் – ‘நம்மை நாமே எரியூட்டுவோமே’
இரமேசு கருப்பையா
ஆகஸ்ட் 2014
செழிப்பான பகுதிகளுக்கு தமிழகத்தில் “தஞ்சாவூர் ஜில்லா’’ என்றொரு பெயருண்டு. இராமநாதபுரம் பகுதி என்றதும் வறட்சியும், சீமைக்கருவேல முள்ளும் நினைவுக்கு வரும். ஆனால் அங்கேயும் செழிப்பானதொரு “தஞ்சாவூர் ஜில்லா” இருக்கின்றது. அது திருவாடனை பகுதியாகும். அந்தப் பகுதியில் விளையும் நெல்லுக்கு தஞ்சாவூர் நெல்லே தோற்றுப் போகும் என்கிறார்கள் அங்கே வேளாண்மை செய்வோர். வேளாண் தொழில் வேரோடும், வேரடி மண்ணோடும் அற்றுவரும் வேளையில் இப்பகுதியில் மட்டும் வேளாண்மை தொற்றிக்கொண்டு நிற்கிறது.
இப்பகுதியில்தான் ஆயிரம் குறுக்கம்(ஏக்கர்)அளவில், பத்தாயிரம் கோடி செலவில் அனல் மின்நிலையம் அமையவிருக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை வட்டம் உப்பூரில் இரண்டு 800 மெகா வாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் திட்டமிட்டுள்ளது. உப்பூர், வளமாவூர், திருப்பாலைக்குடி கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் 952.5 குறுக்கம் பட்டா நிலமும், 379.6 குறுக்கம் புறம்போக்கு நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளது.
இவ்விடம், உப்பூர் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையிலிருந்து 600 மீட்டர் தொலைவிலும், கடற்கரை யிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. இத்திட்டத்திற்காக தூத்துக்குடி துறைமுகத் திலிருந்து நிலக்கரி தொடர்வண்டி மூலம் கொண்டு வரவும், ராமநாதபுரத்திலிருந்து தனி ரயில் பாதை அமைத்து, திட்ட இடத்திற்கே கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சூழல் விளைவு மதிப்பீட்டு ((Environmental Impact assessment) ) திட்ட அறிக்கையும் வெளியிடப்பட்டு, பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டமும் நடந்து முடிந்திருக்கிறது.
இத்திட்டம் இப்பகுதியில் வந்தால், வறண்ட நிலமான இராமநாதபுரம் பகுதி வளமடையும், வளர்ச்சி ஓங்கும், வேலை வாய்ப்பு வெள்ளமெனப் பெருகும் என்று வழமையான பரப்புரையுடன் அரசு இயந்திரங்கள் வலம் வருகின்றன.
தமிழகத்தின் மின்வெட்டுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை.ஆனால் உணவு, எரிபொருள், மின்சாரம் என மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தனது முதலாளிய கட்டுக்குள் வைத்துகொண்டு, பெருநிறுவனங்களின் வணிகத்துக்கு இணங்க இயங்கிவரும் அரசு, முன்வைக்கும் தீர்வுகள் சரியானவையன்று. இவர்கள் மீண்டும் மீண்டும் உலக நாடுகள் உதறித்தள்ளிவரும், உளுத்துப்போன மின் உற்பத்தி முறையான ‘நிலக்கரியை எரித்து, மின்சாரம் தயாரிப்பது’ என்பது தெரிந்தே. கொள்ளிக் கட்டையால் தலையைச் சொரிந்து கொள்ளும் வேலையேயாகும். இந்த உற்பத்தி முறையோடுதான் நாம் முரண்பட்டு நிற்கிறோம்.
இந்தத் திட்டத்திற்காக நிலக்கரியானது முழுக்க இறக்குமதி செய்யப்படவிருக்கிறது. நடுவணரசு நிலக்கரி கொடுத்தால் மட்டுமே சிறிதளவு உள்நாட்டு நிலக்கரியைக் கொண்டு இயங்கும். இறக்குமதி செய்யப்படவிருக்கும் நிலக்கரியின் அளவு ஆண்டுக்கு 4.64 மில்லியன் டன்கள். இதில் கந்தகத்தின் உள்ளடக்கம் 0.8 விழுக்காடு, சாம்பலின் உள்ளடக்கம் 10 விழுக்காடு.
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் கந்தகம் உள்ளடக்கிய நச்சுக்களின் அளவானது நமது உள்நாட்டு நிலக்கரியில் இருக்கும் அளவினைவிட அதிகமாக இருக்கும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த அனல் மின்நிலையத்தின் தண்ணீர்த் தேவைக்காக கடல் நீரானது ஒரு மணி நேரத்திற்கு 15376 கன.மீ வீதம் பயன்படுத்தப்படும். கடல் நீரானது கரையிலிருந்து 5.8 கி.மீ தொலைவு கடலிலிருந்து எடுக்கப்படுகிறது. கடல்நீர் உப்பு நீக்கம் செய்யப்பட்டு குளிர்விப்பானுக்குப் பயன்படுத்தப்படும். பின்னர் அவை மீண்டும் கடலுக்குள் 6.5 கி.மீ.க்கு அப்பால் விடப்படும்.
நிலக்கரி எரிப்பதால் ஏற்படும் தூசுக்களைக் கட்டுப்படுத்தும் கருவிகளும், மாசுக்களை அருகில் அண்ட விடாமல் உயரத்தில் வெளியேற்ற 275 மீட்டர் புகைபோக்கியும் கட்டப்படவிருக்கிறது. திறந்தநிலையில் இறக்கிவைக்கப்பட்டு, புறவெளியில் குவிந்து கிடக்கும் நிலக்கரியின் மாசுக்கள் காற்றில் பறந்து விடாமலிருக்க நீர்த் தெளிப்பானைக்கொண்டு கட்டுப்படுத்துவார்கள்.
அதேபோன்று எரித்தபின்பு மிச்சப்படும் சாம்பல் குவியலின் மீது தொடர்ந்து நீர் இருந்த வண்ணம் இருக்க வேண்டும். அனல் மின் நிலையத்தின் எரிசாம்பல் தேக்கும் குட்டைக்காக 275 குறுக்கம் நிலம் பயன்படுத்தப்படவுள்ளது. சாம்பல் கொட்டப்படும் இடங்களிலெல்லாம் பசுமை வளைய மேம்பாடு, காடு வளர்ப்புத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும் என்றெல்லாம் திட்ட அறிக்கை குறிப்பிடுகின்றது.
நிலக்கரியை எரிப்பதால் வெறும் சாம்பல் மட்டும் வெளியேறப்போவதில்லை, உயிர்ச்சூழலையே அழிக்கக்கூடிய நச்சுப்பொருளான பாதரசத்தையும் வெளியேற்றக் கூடியதாகும். உதாரணமாக, பல வருடங்களாகச் சேர்ந்த 0.9 கிராம் பாதரசம் 10 எக்டேர் பரப்பளவுள்ள ஏரியை நச்சுப்படுத்தும் சக்தி வாய்ந்தது.
100 மெகாவாட் திறனுள்ள ஒரு நிலக்கரி அனல் மின்னுற்பத்தி நிலையம் 11.33கி.கி பாதரசத்தை ஆண்டு ஒன்றுக்கு வெளியேற்றுகிறது. 1600 மெகாவாட் திறனுள்ள சூப்பர் கிரிடிகல் தொழில்நுட்பம் கொண்ட அனல்மின் நிலையம் ஆண்டொன்றுக்கு எவ்வளவு கி.கி பாதரசத்தை வெளியேற்றுமென நாம் கணக்கிட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
இவ்வாறு திட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போன்று இதற்கு முன்பாக தமிழ்நாட்டில் மேட்டூரிலும், தூத்துக்குடியிலும் இயங்கி வரும் அனல் மின் நிலையங்களின் நிலை என்னவென்று நெருங்கிப் பார்த்தாலே தெரிந்துவிடும். திட்ட அறிக்கையெல்லாம், வெற்றறிக்கை யாக மாறிப்போனதைக் காணலாம்.
சூழல் விளைவு மதிப்பீடு என்ற பெயரில் வெளியாகி யிருக்கும் அறிக்கையும் முழுமையானதாக இல்லை. ஒரு திட்டம் செயல்படுத்தும்போது, அத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் நிகழப்போகும் மாற்றங்களை மிகத்துல்லியமாக அளவிடவேண்டும். ஆனால் தற் காலத்தே வெளியாகும் அறிக்கைகள் முழுமையானதாக இல்லாமல் நிறுவனச்சார்புடையதாகவே அமைந்து விடுகின்றன.
இவ்வறிக்கையில் பல்வேறு குறைகள் சுட்டிக்காட்டத்தக்கவைகளாக இருந்தாலும் சிலவற்றை மட்டுமே இங்கு பார்ப்போம்: அனல் மின்நிலையத்திற்காகத் தேவைப்படும் நீர்யாவும் கடல்நீரினைக் கொண்டே உப்பு நீக்கம் செய்து பயன்படுத்தப்படவிருக்கிறது. உப்பு நீக்கும் ஆலைகள் ஏதேனும் காரணத்தால் செயல்படாத நிலை ஏற்பட்டால், மாற்றாக எந்த வழியில் நீரினைப் பெறுவார்கள் என்பதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.மாற்று வழி நீரைப்பற்றி குறிப்பிடவேயில்லை.
கடலிலிருந்து நீரைக்கொண்டு வரும்போது அந்தக் குழாய்கள் தரையையட்டி வருமா? கடல் மட்டத்திலிருந்து உயர்த்தப்பட்ட நிலையில் குழாய்கள் கொண்டு வரப்படுமா? என்பது பற்றியும் குறிப்பிடவில்லை. இது குறித்துப் பின்னரே முடிவு செய்யப்படும், பின் விளைவு கள் பின்னரே ஆராயப்படும் என்பதாக அமைகிறது.
கொதிகலன்களைக் குளிர்வித்தபின் பயன்படுத்தப்பட்ட நீரானது குறிப்பிட்ட வெப்பநிலையை அடையும். அந்நீர் குளிர்வித்த பின்னே கடலில் கலந்தாலும், கடல்நீரில் 2.5 கி.மீ சுற்றுப்பரப்புக்குள் தட்ப வெப்பம் 0.5 முதல் 0.75 டிகிரி செல்சியசு அளவுக்கு உயரும்.
நன்னீருக்காக நீக்கப்படும் உப்புத்தன்மை கொண்ட அடர் உப்புக்கரைசலானது கடலுக்குள்ளேயே வெளியிடப்படும். அடர் உப்புக் கழிவானது கலக்குமிடத் திலிருந்து 2கி.மீ சுற்றுப்பரப்புவரை குறிப்பட்டளவு கடலில் பாதிப்பை ஏற்படுத்தும். இவற்றால் ஏற்படும் விளைவுகளால் கடல் வளத்தில் உண்டாகும் விளைவுகள் குறித்து அவ்விடத்தை அடிப்படையாகக்கொண்டு வாழும் மக்களுக்கு விளக்கமளித்திருக்க வேண்டும். இவை குறித்தும் விளக்கப்படவில்லை.
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நிலக்கரி கொண்டு வரப்படும் என்ற ஒற்றை வாக்கியம் மட்டுமே இருக்கிறது. ஆய்வில் உள்ள நிலைப்படி தூத்துக்குடி துறைமுகத் திலிருந்து, உப்பூர் மின்நிலையம் அமையவுள்ள திருப் பாலைக்குடி வரை, தனியாக சரக்கு ரயில் அகலப்பாதை அமைக்கப்படும். (இந்தப் புதிய ரயில் பாதை அமைய காலதாமதமானால், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து, தற்போது பயன்பாட்டிலுள்ள பாதையிலேயே, தூத்துக்குடி, வாஞ்சி மணியாச்சி, விருதுநகர், மானாமதுரை வழியே ராமநாதபுரத்திற்கு நிலக்கரி கொண்டு வர, மாற்று வழிப்பாதை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.) இவ்விரு வழிகளே பின்பற்றப்படும்.
ஆனால் இவை குறித்தெல்லாம் அறிக்கைகளில் குறிப்பிடப்படவில்லை. இதற்காக நிலம் கையகப்படுத்து வது போன்ற நடைமுறை செயல்கள் குறித்தும் எதுவும் குறிப்பிடவில்லை.
அப்பகுதியில் வேளாண்மைத்தொழில், கடலோர மக்களின் மீன் பிடித்தொழில், கடற்கரையோர மக்களின் உப்பளத்தொழில் எனப் பல்வேறு தொழில்கள் நடை பெற்று வருகின்றது. ஆனால் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவில் தொழில்கள் ஏதும் நடைபெறவில்லை என்றே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். இவற்றை யெல்லாம் ஒரு தொழிலாகக்கூட கருத்தில் கொள்ள வில்லை என்பதுதான் இவர்களின் ஆய்வறிக்கை.
இதுபோன்று பல்வேறு குறைகளுடன் திட்ட அறிக்கையும், அவற்றால் ஏற்படும் சூழல் விளைவு அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது. கருத்துக் கேட்பு கூட்டமும் நடந்தேறிவிட்டது.
“வாசலுக்கு வெளியே விரிகடல் இருபதடி தொலை வில் அலையின்றி துயில்கொண்டிருக்கிறது. அரை மைல் தொலைவு, கடலில் முழங்கால் நனைய நடக்கலாம்.” அவ்வளவு குறைவான ஆழம், பின்னர் நிறுத்தப் பட்டிருக்கும் நாட்டுப்படகை அடையலாம்.
அங்கிருக்கும் ‘மோர்ப்பண்ணை’ என்ற மீனவ கிராமத்தின் நில அமைப்பும் கடல் அமைப்பும் இப்படித் தான் இருக்கிறது. நிலக்கரி எரிக்கவிருக்கும் மேடை (அனல் மின் நிலையம்) அமையும் உப்பூர், உப்பு விளைச்சலுக்கு பெயர் பெற்றதாலே உப்பூர் என்றானது. அடுத்திருக்கும் ‘வளமாவூர்’ ‘வளமான ஊர்’ என்றதாலே வளமாவூர் என்றானது.
அடுத்திருக்கும் திருப்பாலைக்குடி என்ற ஊரில் திறந்த நிலையில் குடிநீருக்கான ‘ஊருணி’ அமைந்திருக்கிறது. கிழக்குக் கடற்கரைச்சாலை என்பதாலும், அவ்வழியே ராமேசுவரம் செல்வதாலும் தமிழ் உள்ளடங்கி பிற மொழிகளிலும் இது குடிநீருக் கானது, தீங்கு செய்யாதீர்கள் என அறிவிப்புகள் இருக்கும். நண்பகலில் அப்பகுதிகளில் விளைந்திட்ட ‘மீன் சோறு’ எனும் சுவையுறும் ‘ஊண் சோறு’ கிடைக்கும்.
ஒரு பக்கம் வேளாண் குடிகளின் ஊர் இருக்கும். அதன் பக்கம் நெல் விளையும் நிலமிருக்கும். எதிர்ப்பக்கம் மீனவ குப்பமிருக்கும்; அதன் பக்கம் உப்பு விளையும் அளமிருக்கும்.
வேளாண்நிலங்களை அளவிட ‘முந்திரி’ என்ற பழங்கால அளவீட்டுச்சொல் வழக்கில் உள்ளது. உப்பூருக்கு அருகில் ‘பேயாறும்’, தொலைவில் ‘உப்பாறும்’ ஓடிக்கொண்டிருக்கிறது. ஏந்தல், சிறுகுளம், பெரியகுளம் என நீளும் நீர்நிலைகளின் எண்ணிக்கை பலவாகும். பாக் நீரிணை எனும் கடல் பகுதியும் அங்குதான் அமைந்துள்ளது. பக்கத்திலிருக்கும் ‘பாம்பன்’ மீனவர்களும் படகோட்டிவரும் வளமான கடற்பகுதி. கடலுக்குள் அமைந்திருக்கும் ஒன்பது வழிபாட்டுச் சிலைகள் கொண்ட தேவிபட்டினம் என்ற ஊர். இப்படியாக மரபார்ந்த வாழ்வும் வளமான இயற்கையும் கொண்ட பகுதியாக இருக்கிறது.
இப்பகுதியின் உயிர்ச்சூழல் பெரிதும் கடல் வாழிடமாக இருக்கிறது. அவ்விடம் வாழும் உயிர்கள் அதிகளவு உப்புத்தன்மையைத் தாங்குமளவு தகவமைவு கொண்டவை. கடலோரத்தின் இயற்கையமைப்பு நிலம், கடல், காற்று ஆகியவற்றின் ஆழ்ந்த இடைத்தொடர்பால் பிணைக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு வேதியியல், உயிரியல் அளவீடுகளின்படி நீரானது மிகவும் உயிர்வளி (Oxygen) உடையதாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும், உயிரியல் அடிப்படையில் முதல்நிலை, இரண்டாம் நிலைகளில் உற்பத்தித் தன்மை உடையதாகவும் இருக்கிறது. கடல்நீரின் இப்பண்புகள், பல்வேறு தாவர, விலங்கினங்களின் பல்லுயிர்ப் பரவலை பறை சாற்றுகிறது.
கடற்கரையோரத்தை அடர்த்தியான வகையில் அலையாத்திக்காடுகள் போர்த்தியிருக்கின்றது. Avicennia Marina என்ற அரியவகை அலையாத்தி (Mangrove)) மரங் கள் அதிகமாக இருக்கின்றது. இம்மரங்கள் பல்வேறு மருத்துவ குணமுடையவை என்று அறியப்பட்டு பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. Rhizo Phoraapiculata என்ற தாவர வகையினமும் கடலோரப் பகுதியில் காணப்படுகின்றது. இவை அழிந்துவரும் தாவர வகைகளில் ஒன்றாக உலக அரிய வகையினங் களின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்கரையோரத்தில் உப்பளங்கள் இருக்கின்றன.இறால் பண்ணைகள் இருக்கின்றன. இவற்றுக்கு இடையே இடைவிடாது கழிமுகங்களும், அலையாத்தி மரங்களும் நிறைந்து காணப்படுகிறது.
இப்பகுதியில் இருக்கும் மீனவர்கள் யாவரும் நாட்டுப்படகு மீனவர்களே. இவர்களால் கடலில் அதிக தூரம் செல்ல முடியாது. கரையோர மீன்பிடிப்பில் வாழ்ந்து வருபவர்கள். இவர்களின் மீன் விளைச்சலுக்குக் காரணமாக அமைவது கடலோர அலையாத்திக் காடுகளே. நிலக்கரிச் சாம்பல், அலையாத்திக் காடுகளை அழித்துவிடும் வல்லமை கொண்டவை. கடலிலிருந்து நீர் எடுக்கும் குழாய்களும், தடுப்புகளும் படகுகளின் இயக்கத்திற்கு இடையூறாக அமைந்திடும். அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டால் சாம்பல் மேடுகள் மட்டுமே இருக்கும். வேறு எதுவும் இருக்காது.
நூறு விழுக்காடு வெளிநாட்டு நிலக்கரியைக் கொண்டு இயங்கும் அனல் மின்நிலையங்கள் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்காகவே காத்திருக்க வேண்டி வரும். அவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ‘இறக்குமதி’ செய்பவர்கள் வைப்பதே விலை. உலகச் சந்தையின் நிலைக்கு ஏற்ப விலையில் அலையடிக்கும்.இவ்வாறு அதிகக் கொள்முதல் கொண்டு இயங்கும்போது, மின் உற்பத்திச் செலவும் அதிகரிக்கும். மின் கட்டணமும் உயரும். அல்லது அரசுக்கு மானிய இழப்பாக செலவு மிகும்.
வெளிநாட்டில் நிலக்கரிச் சுரங்கங்களை வைத்திருக் கும் பெருவணிகத்தினர் தமிழகத்தின் மின்தட்டுப் பாட்டைக் கரணியமாக வைத்து, அவர்களின் விற் பனைக்குச் சந்தை விரிக்கும் வேலையைச் செம்மையாக செய்திடவே அனல் மின் திட்டங்களைத் திணிக்கிறார்கள்.
இயற்கை ஆற்றல்களைக் கொண்டு பெறும் நீடித்த மின்னுற்பத்தியில் ஈடுபடாமல்,காலத்தால் கைவிடப் பட்ட நிலக்கரி எரிப்பு மேடைகளை நிறுவுவது என்பது நம்மை நாமே எரியூட்டும் நிலைக்குச் சமமாகும்.
நியூட்ரினோ ஆய்வகமா? அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கா?
பத்மநாபன்
ஆகஸ்ட் 2014
தமிழக கேரள பகுதிகளை உள்ளடக்கிய இடுக்கி தேனி மாவட்டத்தில் இந்திய நியூட்ரினோ ஆய்வகத்தை (இ.நி.ஆ) அமைப்பதற்கு கடந்த மாதம் இந்திய அரசு நூறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. புவியின் ஆழத்தில் அமைக்கப்பட்ட ஆய்வகங்களில் இந்திய நியூட்ரினோ ஆய்வகமே உலகின் மிகப் பெரிய பௌதிக ஆய்வகமாகும். (கட்டி முடிக்கப் பட்ட நிலையில்) அதிக ஆற்றல் மிக்க நியூட்ரான் கதிர்களைக் கையாளும் வகையிலான கருவிகளைக் கொண்டு மேற்கொள்ளப்படுகிற இவ்வாய்வகக் கருவிகள் கலிபோர்னியாவில் உள்ள பெர்மிலாப்பில் தயாரிக்கப் பட்டவையாகும். (பெர்மிலாப் (FERMILAB)அதிக ஆற்றல் மிக்க துகள்கள் குறித்து ஆய்வு செய்யும் பௌதிக ஆய்வகமாகும். இவ்வாய்வகம் அமெரிக்காவின் தேசிய ஆற்றல் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.மொர்).
நியூட்ரினோ திட்டம் என்ற பேரில் அணுக் கழிவுகளைப் பூமிக்கடியில் பாதுகாப்பாக வைக்கும் வகையிலான ஆழ் புவிசார் அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கை (DGRRW) இந்திய அரசு கட்டவிருப்பது குறித்து இக்கட்டுரை விளக்க முற்படுகிறது. இ.நி.ஆ தொடர்பான அனைத்து ஆய்வுகளையும் சென்னையில் உள்ள இந்தியக் கணித அறிவியல் மையம் (IMSc)) மேற்கொண்டது.
இதை வைத்து அரசின் ஒப்புதல் பெற்ற பிற்பாடு இ.நி.ஆ.தத்தின் குவிமையம் மும்பையிலுள்ள டாட்டா ஆய்வு (அடிப்படை fundamental) நிறுவனத்திற்கு மாறியது. அதே நேரத்தில் தேனி மாவட்டம், பொட்டிபுரம் கிராமத்திலுள்ள இருபத்தேழு ஹெக்டேர் பரப்பளவிலுள்ள பசுமை நிலத்தை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்திடம் தமிழக அரசு கையளித்துள்ளது கவனிக்கப்படவேண்டிய செய்தியாகும். இது நிச்சயம் இ.நி.ஆ திட்டம் தொடர்பான கட்டுமானப்பணிக்கு ஒதுக்கப் பட்டுள்ள தாகவேத் தெரிகிறது.
2010ஆம் ஆண்டில் இ.நி.ஆ திட்டத்திற்காக பொட்டிபுரம் பகுதி தேர்வு செய்யப்பட்டது. அதேநேரம், சுற்றுச்சூழல் அமைச்சகமிடமிருந்தும் (அதிகாரப் பூர்வமற்ற வகையில்) இத்திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டப்பட்டிருந்தது. இச்சூழலில் இந்திய கணித அறிவியல் மையமானது இ.நி.ஆ தொடர்பான சுற்றுச்சூழல் அனுமதி கோரும் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் இத்திட்டம் தொடர்பான ஒரு தகவல் மட்டுமே விளக்கப்பிட்டிருந்தன. அவ்விளக்கம்:
கோப்பு எண்: 0336/2010
விண்ணப்பம் செய்த நாள்: 22.04.2010
விண்ணப்பதாரரின் பெயர்: இந்திய கணித அறிவியல் மையம்
இட முகவரி: பொட்டிபுரம் கிராமம், உத்தமபாளையம் தாலுக்கா
தொடர்பு முகவரி: சி.ஐ.டி வளாகம், தரமணி, சென்னை60013
மாவட்டம்: தேனி
வகை: அணுமின் நிலையம், அணுசக்தி நிகழ்முறை (மறுசுழற்சி) நிலையம், அணுக்கழிவு மேலாண்மை நிலையம்
அணுமின் நிலையம் அமைக்கவோ அல்லது அணு சக்தி நிகழ்முறை நிலையம் அமைக்கவோ அதிகளவிலான நீர் தேவைப்படும். ஆனால் பொட்டிபுரம் கிராமமோ வளமான நீர் ஆதாரப் பிடிப்பு அற்ற பகுதியாகும். ஆகவே மூன்றாம் வகையான அணுக்கழிவு மேலாண்மை நிலையம் அமைக்கவே இவ்விடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது. அணு உலைக் கலங்களிலிருந்து வெளியேற்றப் படும் வீரியமுள்ள கதிரியக்கக் கழிவுகளை சேமித்து வைப்பதற்கான ஆழ் புவிசார் கிடங்காகவே இந்நிலையத்தை அமைப்பதாக யூகிக்கலாமா என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்துத்தான் (அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் வகையிலான ஆழ் புவிசார் கிடங்கு மொர்) கடந்த இரு ஆண்டுகளாக அணுசக்தித்துறை அதிகாரிகளுக்குள் தீவிரமான விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்திய அணுசக்தித்துறையின் கனவான ஆண்டுக்கு நாற்பதாயிரம் மெ.வாட் மின் உற்பத்தி என்ற இலக்கு எட்டப்படுமேயானால், ஆண்டுக்கு ஆயிரத்து இருநூறு டன் அணுக்கழிவுகளை கையாள இரண்டாயிரத்து நானூறு கனசதுரடி கொள்ள உள்ள நிலப்பரப்பும் இந்திய அரசுக்குத் தேவைப்படும். அப்படிச் செய்யும் பட்சத்தில், ஐம்பது ஆண்டுகள் கழித்து பார்த்தோமானால் அணு மின் நிலையங்கள் வெளித்தள்ளுகிற அணுக்கழிவுகள் அறுபதாயிரம் டன்னாக இருக்கும்.ஒரு கன அடி அணுக்கழிவைச் சேமித்து வைக்க ஐந்து கன அடிப் பரப்பிலான இடம் தேவைப்படும் என்று எடுத்துக்கொண்டால் ஒட்டுமொத்தக் கழிவுகளையும் சேமிக்க ஆறு லட்சம் கன அடியென பனிரெண்டு முதல் பதினைந்து சதுர கி.மீ பரப்பளவு தேவைப்படும்.
இ.நி.ஆ அமைப்பதற்கு கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கன அடியுள்ள பரப்பளவு தேவைப்படும்.எனவே இக்கட்டுமானத்தை மேற்கொள்ள எட்டு லட்சம் கனஅடி பரப்பளவுள்ள மிகப்பெரிய இடத்தை பூமிக்கு அடியில் அகழ்ந்தெடுக்கவேண்டும். இதற்காக கிட்டத்தட்ட இருபத்தைந்து லட்சம் டன் பாறைகள் வெடிவைத்துத் தகர்த்தாக வேண்டும். இதற்கு கிட்டத்தட்ட மூவாயிரம் டன் ஜெலட்டின் குச்சிகள் தேவைப் படும். இவையனைத்தும் யுனசுகோவால் பாதுகாக்க வேண்டிய உயிர்ச்சூழல் மண்டலம் என அறிவைக்கப் பட்டதும், நுண்மையான புவிசார் பிரதேசமுமான மேற்குத் தொடர்ச்சி மலையின் மையத்தில்தான் நிகழப்போகிறது!
நிலநடுக்க சாத்தியப்பாடும் நீர்த்தாங்கிகளும்:
பாபா அணுசக்தித் துறையைச் சேர்ந்த புவிசார் வல்லுநரும் நிலத்தடி கழிவு மேலாண்மை அறிவியலாளருமான பாஜ்பாய் கூறுகிறார்: “ஆழ் அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கை ஒரு புவிப்பிரதேசத்தில் அமைக்க வேண்டுமென்றால் அப்பகுதியானது, குறைவான நிலநடுக்க வாய்ப்புள்ள பகுதியாக இருக்கவேண்டும். மேலும் குறைவான நிலத்தடி நீர்ப்பிடிப்பு பகுதியாகவும், வனப்பகுதியற்றதாகவும், பாசன நிலங்களாக இல்லாமலும் கனிம வளங்கள் கிடைக்காத நிலப் பிளவுகள் இல்லாத இடமாகவும் இருக்கவேண்டும்.”
ஆனால் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடுக்கி&தேனி பகுதியோ கனிம வளங்களைத் தவிர அனைத்தும் பெற்றுள்ளது.
இவ்வனைத்து கட்டுமானமும் அதிக நிலநடுக்க வாய்ப்புள்ள சுருளி நிலத்தட்டின் மையத்தில் சரியாக அமையப்போகிறது. இந்தியத் தர அமைப்பின் (BIS) ஆவணப்படி இடுக்கி மாவட்டமும் தேனி மாவட்டமும் நிலநடுக்க வாய்ப்புள்ள மண்டலத்தில் எண் மூன்றில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில்,இ.நி.ஆ திட்டம் தொடர்பான சூழல் விளைவு மதீப்பீட்டு அறிக்கை (Environment Impact Assessment)) தயாரிக்கும் பணியை கோவையில் உள்ள சாலிம் அலி பறவையியல் ஆராய்ச்சி மற்றும் இயற்கை வரலாற்று மையம் ((SACON) மேற்கொண்டது. இவர்களோ இடுக்கிதேனி பகுதியை நிலநடுக்க வாய்ப்புள்ள மண்டலம் இரண்டில் குறைத்து வகைப்படுத்தியுள்ளனர்! இந்தியத் தர அமைப்பினரின் வேலையை பறவை நோக்கும் குழு செய்கிறது!
உலகளவில், நீர்த்தேக்கங்களால் ஏற்படுகிற நில நடுக்கங்கள் குறித்த பட்டியிலில் இதுவரை ஐம்பந்தைந்து நீர்த்தேக்கங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.இதில் இந்தியாவிலிருந்து இடுக்கி நீர்தேக்கமும் இப்பட்டியலில் உள்ளதாக குஷாலா ராசேந்திரன் கூறுகிறார். கடந்த சூலை 2011 ஆம் ஆண்டு முதல் அதே ஆண்டின் நவம்பர் மாதம் வரை, மூன்று ரிக்டர் அளவுடைய மிதமான மூன்று நிலநடுக்கங்களும் இருபது நில அதிர்வுகளும் இப்பகுதியில் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக் கருவிகளில் பதிவாகியுள்ளது.
இது ஓர் அசாதாரண நிலைமை என்று சொல்லி முடிக்கிறார் ராசேந்திரன். மேலும் இதையே சி.பி ராசேந்திரனின் மற்றுமொரு ஆய்வுக்கட்டுரையும் உறுதிசெய்கிறது.அவர் கூறுகிறார் ”கேரளாவின் மையப்பகுதியில் இதற்கும் முன்பாக பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம்.சமீப காலங்களில் கேரளாவின் இதர பகுதிகளைக் காட்டிலும் இங்கு அதிகமான நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் இவையெல்லாம் மனித நடவடிக்கைகளால் ஏற்படுகிற விளைவுகளே” என்கிறார். இதோடு, இப்பகுதியில் ஒவ்வொரு கால் நூற்றாண்டுக்கு ஒருமுறையும் 4.5 முதல் 5.5 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
பாதாள சுரங்கவழித் திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்பாக அப்பகுதியில் உள்ள நீர்த்தாங்கிகளுக்கும் பிற இயற்கை வளங்களுக்கும் மனிதர்களால் கட்டப்படுகிற கட்டுமானங்களால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதை அங்கு மேற்கொள்ளப்படுகிற புவிசார் தொழிநுட்ப ஆய்வறிக்கை உறுதியளிக்க வேண்டும். மாறாக இடுக்கி&தேனி பகுதியில் அமைய விருக்கிற “ஆழ் புவிசார் கிடங்கு” திட்டத்திற்கு இவ்வகையான ஆய்வுகள் இதுவரை நடைபெற்றதாகத் தெரியவில்லை.
ஒருவேளை அப்படி ஒரு ஆய்வறிக்கையை இத்திட்டம் தொடர்பாக தயாரித்து இருந்தாலும் பொதுமக்களிடம் அதை ஒருபோதும் அவர்கள் பகிர்ந்துகொள்ளப்போவதில்லை. ஏனெனில் இவ்வாய்வறிக்கை அனைத்தும் ரகசியமாக பாதுகாக்கப்படும் ஆவணம் ஆயிற்றே!
எங்களிடம் இ.நி.ஆ திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புவிசார் தொழிநுட்ப ஆய்வறிக்கை யன்று கைவசம் உள்ளது. ஆறு வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளை மாதிரி ஆய்வின் மூலம் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இ.நி.ஆ சார்பாக ஆய்வை மேற்கொண்ட புவியியில் அறிவியலாளரோ இவ்வகையான மாதிரி களைச் சேகரிக்க ஆய்வகத்தை விட்டு வெளியே கூட வரவில்லை. மேலும், இ.நி.ஆ சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் நீர்த்தாங்கிகள் குறித்தோ அணைகள் குறித்தோ மறந்தும் ஓர் வார்த்தை கூட குறிப்பிடவில்லை! புவிசார் தொழிநுட்ப அறிக்கை குறித்த விமர்சனம் தனியாக எழுதப்பட்டுள்ளது.
இந்நிலையில் கீழ்வரும் பார்க்கின் அறிக்கையும் ஒரு விதத்தில் கவனிக்கும் படியாக உள்ளது:
“வடமேற்கு இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள பாறைகளை ஆய்வு செய்ததில் நம்பிக்கையளிக்கும் விதமாக பல தகவல்கள் கிடைத்தன. மேலும், முப்பரிமாண வடிவிலான பாறையியல் மாதிரிகளை உருவாக்கும் நோக்குடன் செயற்கைக்கோள் தகவல்கள், பல்வேறு அலகுகளில் உள்ள நிலப்பட வரைவுத் தகவல்கள், புவிசார் தகவல்கள், மின்காந்தத் தகவல்கள் மற்றும் தாங்குதிறன் தகவல்கள் போன்ற பல தகவல்கள் அப்பகுதிகளில் சேகரிக்கப்பட்டன.
மேலும் அப்பகுதிகளில் ஐயாயிரம் மீட்டர் ஆழம் வரையிலான இருபத்தைந்து ஆழ் துழாய்கள் அமைக்கப்பட்டு பெறப்பெறும் தகவல்களைக் கொண்டு இம்முப்பரிமாண மாதிரிகள் செழுமைப்படுத்தப்படும். அடுத்ததாக இவ்வாய்வுகளில் கிடைக்கபெற்றப் பாறைகளின் புவிவேதியியல் பண்புகள், நீரியியல் பண்புககளை அடிப்படையாகக் கொண்டு நூறு சதுர கி.மீ பரப்பளவிலுள்ள இருபத்தி இரண்டு மண்டலங்களில் தீவிரமான ஆய்வுகள் மேற் கொள்ளப்படும். இறுதியாக நான்கு சதுர கி.மீ பரப்பளவிலுள்ள ஒரு மண்டலம் மட்டும் தேர்வு செய்யப்பட்டு அதில் கூடுதலாக வேறு சில ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு திட்டத்திற்கு உகந்த பகுதியாக அடையாளங்காணப்படும்.”
உச்சநீதிமன்றத்தில் வாதிக்கப்பட்ட கழிவு மேலாண்மைச் சிக்கல்:
கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தீவிரமான வாதப்பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருந்தது. அப்போது கழிவு மேலாண்மையின் பேரில் நிகழ்ந்த விவாதத்தில், கர்நாடகாவின் கோலார் தங்க வயல்களின் கைவிடப்பட்ட சுரங்கப்பகுதியில் அடிஆழத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கழிவுகள் சேமிக்கப்படும் என்று அரசு வழக்குரைஞர் கூறினார். மேலும் கர்நாடகா வின் கோலார் தங்க வயல் பகுதிகளில் ஒன்றை ஆழ் புவிசார் கிடங்கிற்கு ஏற்றவாறு மாற்றப்படும் என தேசிய அணுசக்தி நிறுவனத்தின் உறுதிமொழித்தாள் தெரிவிக்கிறது.
தமிழககேரள மாநிலங்களின் தேனி&இடுக்கி பகுதியில் அணுக்கழிவு மையம் அமைப்பதாக மேலே நடந்த விவாதத்தில் எந்த அறிவிப்பும் இல்லை. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 2010இல் இ.நி.ஆ திட்டத்திற்கான விண்ணப்பத்தை வழங்கியது தொட்டு, உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழித்தாள் தாக்கல் செய்தது, பாரளுமன்றத்தில் அமைச்சர்களின் பேச்சுக்கள், அணு சக்தி மையத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு என அடுத்தடுத்து நடந்த அனைத்து விடயங்களும் தமிழக அரசுக்கு இந்தியக் கணித அறிவியல் மையம் அளித்த விண்ணப்பத்திற்குப் பிறகே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாம் அவர்களை நம்பலாமா?
உலகம் முழுவதும் அணுசக்தித் துறையானது கடந்த சில மாத காலமாக மோசமான சிக்கல்களை எதிர் கொண்டு வருகிறது. அமெரிக்காவின் அணு ஆயுதக் கழிவுகளை சேமித்து வைப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கதிர்வீச்சுடைய அணுக்கழிவு சேமிப்பு கிடங்கொன்று நியூ மெக்சிகோவின் கார்ல்ச் பாத்தில் உள்ளது. அக்கிடங்கில் கடந்த பிப்ரவரி மாத மத்தியில் இருந்து கதிர்வீச்சு கசிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு கசிவு ஒரு செய்தியல்ல, மாறாக ஒரு லட்சம் வருடத்திற்கு கசிவு ஏற்படாத வகையிலான பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொண்டு வடிவைமைக்கப்பட்ட கிடங்கிலிருந்து கசிவு ஏற்படுவதுதான் அச்சம் தருவிக்கும் செய்தியாக உள்ளது.
தரைமட்டத்திலிருந்து நானூறு மீட்டர் ஆழத்தில் உப்புப் படிவத்திற்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள இக்கிடங்கானது 1999ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இக்கிடங்கை அமைப்பதற்கு முன்பாக இருபது ஆண்டுகால ஆராய்ச்சிகளும் திட்டமிடலும் நடைபெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.!
ஆழ் அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கிற்கான பாதுகாப்பான இடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தற்போது நாற்பது நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.அமெரிக்காவின் (பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில்) யூக்கா மலைப்பகுதியில் மேற்கொள்ளப் படவிருந்த அணுக்கழிவு சேமிப்பகத் திட்டம் இறுதியில் கைவிடப்பட்டது. இத்திட்டத்தின் ஆராய்சிக்காக மட்டும் கடந்த இருபது ஆண்டுகளாக செலவிடப்பட்ட தொகை எட்டு பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
சமீபத்தில் கம்பரிய உள்ளாட்சி அமைச்சகம் இங்கி லாந்து மத்திய அரசு முன்மொழிந்த ஆழ் அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கு திட்டத்திற்கு ஒப்புதல் தர மறுத்து விட்டது. அமெரிக்காவின் லிவர்பூல் தேசிய ஆய்வகத் தின் ஆராய்ச்சியாளர் தாமஸ் புஷ்செக் கூறுவதாவது, வரலாற்றில், 10,000 வருடங்களுக்கு ஒரு பொருளை பாதுகாப்பாக வைப்பது நிகழாத விசயம். 10,000 வருடங்கள் என்பது பனியுகம் முடிந்து இன்றைக்கு வரை உள்ள கால அளவில் சரிபாதியாகும், எகிப்தின் பிரமிட்கள் கட்டி அதில் பாதி வருடங்கள் தான் ஆகி இருக்கும்.
இந்தியாவில் அணுமின் நிலையம் அமைப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அமைதியான அறவழியில் எதிர்த்து வருகின்றனர். மத்திய இந்தியாவில் அமைப்பதாக இருந்த ஆழ் அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கு திட்டமும் நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக வெற்றிபெறவில்லை. அணுசக்தித்துறை வல்லுநர்கள் ஆண்டுக்கு பல மில்லியன் யூனிட் அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள்.
அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தியில் மூன்று விழுக்காடு என்ற அளவில்!.. இன்னும் சொல்லப்போனால் தேசத்தின் மூன்று விழுக்காட்டு மகிழ்ச்சிக்காக! ஆனால் நியாமாக இதனால் பயனடைவோர் அதன் கழிவுகளிலும் பங்கிட்டுக்கொண்டாக வேண்டும்! அணுசக்தித்துறை விஞ்ஞானிகள் அறிவுக்குகந்த வழிக்கு மாறான வகையில், நச்சு ஆபத்துமிக்க செயலை மறைத்து மறைத்து செய்வதற்கு பலவந்தப்படுப்படுகிறார்கள். இதுவே நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்திற்கு பின்னாலிருக்கும் ஆபத்தாகும்.!
1950 ஆம் ஆண்டுமுதல் செயல்பட்டுவரும் தேசிய அணுசக்தி மையமானது விரைவில் காணாமல் போகலாம்…. பல நூறு ஆண்டுகளாக ஓடும் பெரியாறு, வைகை மற்றும் வைப்பாறு போன்ற ஆறுகளும் மலைகளுக்கு அடியிலான நீர்ஓட்டங்களும் சிறப்பான பல்லுயிரியப் பெருக்கத்திற்குக் காரணமாக இருக்கிறது. தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், மக்கள் சமூகம் என அனைத்து உயிரினங்களும் சிறப்பாக வாழும் வகையில் சிறந்த சூழல் அமைவாக இப்பகுதி திகழ்கிறது.
நமது பூவுலகானது அக்குபஞ்சர் புள்ளியுடன் கூடிய “வாழும் கோளாகும்”. அதில் இடுக்கியும் ஒன்று. இந்நிலையில் இப்பெரு மலைப்பகுதியை அதில் வசிக்கும் மக்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லாமல் தோண்டுவது என்பது சனநாயகத்திற்கு விரோதமான செயலாகும். இந்தியாவின் அறிவியல் தலைமையானது விவேகமான முறையில் சிந்தித்து இத்திட்டத்தை கைவிடும் என்றும் நம்புகிறோம். தோல்வி அடையும் இந்திய அணுசக்தித் துறையின் சிற்பிகளான ஜவஹர் லால் நேருவிற்கும் ஹோமி பாபாவிற்கும் வரலாற்றில் நிச்சயமாக அன்பு நிறைந்த நினைவகங்கள் மட்டுமே போதுமானவை.
நன்றி:
India’s Deep Geological Repository For Radioactive Wastes (DGRRW)
Coming up In Idukki Theni portion Of the Western GhatsCounter Currents.
கட்டுரையாளர்கள்:
V.T. பத்மநாபன் – அணுசக்திதுறைக்கு எதிரான மக்கள் போராட்ட அமைப்பின், முக்கிய ஆலோசகர் குழுவின் உறுப்பினராவார். அணுசக்திப் பாதுகாப்பு, கதிர்வீச்சு, உடல்நலம் மற்றும் பிற சூழல் சார்ந்த சிக்கல்களை தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.
லெஸ்லி அகஸ்டின் – உயிரிதொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அதோடு பத்திரிகைத் துறையில் பட்டம் பெற்று அறிவியல் செய்தியாளராக நான்கு ஆண்டுகள் பணிசெய்தவர். இவ்வம்மையார் சூழலியல் குறித்தும் தொழில்நுட்பம் குறித்தும் ஆராய்ச்சி செய்தும் எழுதியும் வருகிறார்.
மருத்துவர். ஜோசப் மக்கோலில் – நுண்ணறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். கொச்சின் பல்கலைக் கழகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் பணிசெய்துவருகிறார்.
கலைச்சொற்கள்
Deep Geological Repository Radio active Wastes ஆழ் புவிசார் அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கு
Environment Impact Assessment(EIA) Report சூழல் விளைவு மதீப்பீட்டு அறிக்கை
Deep Geological Repository ஆழ் புவிசார் கிடங்கு
Geotechnical’ study report புவிசார் தொழிநுட்ப அறிக்கை
Leave a Reply